இலங்கை என்று அழைக்கப்பட்ட நாட்டிலே ஐரோப்பியர் வரமுன்னர் சுதந்திரமாக இயங்கிய மூன்று இராச்சியங்கள் இருந்தன.கண்டி, கோட்டை,யாழ்ப்பாணம் என்பனவே அவை.
யாழ்ப்பாண இராச்சியம் என்பது யாழ்ப்பாணப் பகுதியையும், தீவுப் பகுதிகளையும், மன்னார், முல்லைத்தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. 1619ம் ஆண்டு யாழ்ப்பாணம் அடிமைப்படுத்தப்பட்டது. அதாவது போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.
இவ்வாறு எமது தமிழீழப் பகுதி அந்தியரிடம் அடிமைப்படுவதற்கு காரணம் என்ன? 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல புதிய மாற்றங்கள் தோன்றின. கொலம்பஸ், வஸ்கொடகாமா, மகலன், போன்ற கடலோடிகள் தென்னமரிக்க, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கும் புதிய கடல் பாதைகளைக் கண்டு பிடித்தனர். இதன் மூலம் இந்நாடுகளிடமிருந்த செல்வங்களையறிந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள், வணிகம் செய்வதற்காக வருவது போல் வந்து இந்த நாடுகளை அடிமைப்படுத்தினர் இவ்வாறு போர்த்துக்கல், ஒல்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போன்ற நாடுகள் 3ம் உலக நாடுகளை அடிமைப்படுத்தின.
அதாவது தமது நலனுக்காக அப்பொழுது 3ம் உலகநாடுகள் என்று அழைக்கப்படும் ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க (இலத்தீன் அமெரிக்கா) நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்டமையே ஏகாதிபத்தியங்கள் எனப்படும் இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகள் குடியேற்ற நாடுகள் என்று அழைக்கப்படும்.




